Tuesday, December 09, 2008

தனிமை

நீ தெரியாதபோது
தகித்து எரிந்த இரவுகளில்
உனை தெரியாத தனிமை
ஒரு எதிரியாய் கடந்துசென்றது

நீ இருந்தபோது
நீ இல்லாத நேரங்களில்
அதே அழுத்தத்தின்
வேறு பரிமாணத்தில்
ஒரு மேகமாய் மாறி விட்டிருந்தது

நீ அருகிலிருக்கும்போது
நானில்லா உன் புகைப்படங்களில்
எட்டிப்பார்த்துவிடுகிறது என் தனிமை
எதிர் வீட்டு நாய்க்குட்டியாய்

எதேதோ சொல்லி
உன் கண்ணீரில் நம் காதலை
கரைத்த அந்த இரவிலிருந்து
ஒரு நண்பனாய் அருகே படுத்துக்கிடந்தது

இப்படி
தனிமையோடு சேர்ந்திருந்ததில்
என்னுடன் பழகிவிட்டிருந்தது
இப்போதெல்லாம்
என்னை விட்டு எங்கும் பிரிந்துபோவதேயில்லை
பர்சில் யாருக்கும் தெரியாமல்
வைத்திருக்கும் 
என் ராசியான கடவுள்போல.

2 comments: