Saturday, June 19, 2010

சுயம்

inner cry...

கனவுகளின் கனத்த பிம்பங்களிலிருந்து

மீண்டு விழித்ததும்
அதீத கூக்குரலெடுத்து 
கதறுகிறதென் சுயம்.
ஏதோவொரு
ரோமநிறம் மாறிய நாளில் தான்
அதுவென்னுள்
நுழைந்திருக்கவேண்டும்.
எனக்கு வெளியே
என் சுயமென்பது
வெறும்
பிம்பமாகிப்போனதில்
அத்தனை சௌகர்யம்.
எடுப்பான அடையாளங்களை
தேர்ந்தெடுத்து அடுக்கி,
யார்யாரையோ
பூசி மொழுகப்பட்ட
அச்சு அசலானவொரு 
கூழ்மம் நான்.
யாருமற்ற
யதார்த்தத்திலிருந்து
விலகிய
கணங்களில் மட்டும்
ரணம் கமழும் அவஸ்தை.


Photo courtesy: © 
Alexandru Bizighescu.
-

Wednesday, February 17, 2010

எனக்கானவை


நீங்கள் எரிக்கும்
என் பிணம் சிதறி வீழ்கையில்
வறண்டு, வாய் பிளந்ததும்
ஜீவாலையாக மாட்டேன்!
அகாலமாய் இறக்காமல்
உயிர் மட்டும் பறித்து
நெடு ஆழத்தில் புதைத்துவைப்பேன்.
என் உடல் தின்று செரித்து
காத்திருப்பேன்...
ரணங்கள் வலியெடுத்துக் கதறும்
குளிர்காலப் பகற்பொழுதொன்றில்
முனை மழுங்கிய என் விரல்களை
தேடிச்சென்று கூர் தீட்டி
தூரத்து கடல் நீரின்
ஈரம் உறிஞ்சி
செரித்த அணுக்களனைத்தும்
செலுத்தி
வேர் விட்டு,
வார்ப்பிரும்பு சங்கிலிகளுடைத்து
முளைத்தெழுவேன்!
துளிர்க்கும் அந்த நாள் முதல்
இது
எனக்கான மண்
எனக்கான வானம்
எனக்கான காடு...

Image courtesy: velhametsa.
-

Tuesday, February 02, 2010

நொடிக்கொரு துளி



நாளைக்கான சமன்பாட்டில்
தவிர்க்கயியலாமல்
நேற்றைய என் சிதையும்
இன்றைய எச்சமும்
எப்படியும் ஒட்டிக்கொள்கின்றன...
கதறியழுத பின்னும்
மாறமுடியாத என்னை
தீயிலிடுவதாய் எழுதி
பேனா முனை நசுக்கியிருக்கிறேன்
ஏழாவது முறையாய்.
என் கதவுகளினுள் இன்றும்
பூட்டியே கிடக்கிறேன், 
என்றாவது விழித்துப்பார்க்கையில்
நானற்றதாகவே படுகிறது உலகம்.
முத்து, சிவக்குமார், சங்கர் வரிசையில் 
நாளை நானுமிருக்கலாம்!
என்ன செய்ய
அனைத்தையும்
வேடிக்கை பார்த்திருப்பதைத் தவிர..?
நொடிக்கொரு துளியாய்
சிந்திக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை.

-