Monday, July 30, 2018

கேன்சர் (பகுதி 3)

"ஒரு பொய் சொல்றோம்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும்"  
காந்தி பாபு (சதுரங்க வேட்டை, 2014)



"(புற்றுநோய் - CANCER) கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.
உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம். புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும். இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.
"கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும்  உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.
இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம். கடந்த காலத்தில் ஸ்கர்வி (Scurvy) எனும் ஒரு கொடிய  நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு  என்பது தெரியவந்தது.
கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர். இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.
நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.
தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை  கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய வல்லமைபெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE  லேட்ரில்  உள்ளது.
ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோ விலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கபடுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டுசெல்லப்படுகிறது .
DR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் "டெத் ஆப் கேன்சர்" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சர் ஐ எதிர்க்கும் மருத்துவ முறையில்  90% வெற்றி கண்டார்.
கேன்சர் குறைபாடு நீக்க உண்ண வேண்டிய உணவுகள்  :
1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், ,  லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி 2. பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது 3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி 4. விதைகள்-  எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை 5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி 6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.
கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்:
அப்ரிகாட், லிமா பீன்ஸ், ஃபாவா பீன்ஸ் (Fava Beans), கோதுமை புல் (Wheat Grass), பாதாம், ராஸ்பெரிஸ், ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்க்பெரி , பிளூபெர்ரி, பக் வீட் (Buck Wheat), சோளம், பார்லி, குதிரைவாலி, முந்திரி, மெகடாமியா கொட்டைகள்  (Macadamia Nuts), முளைகட்டிய பீன்ஸ், இவை அனைத்தும் பி-17  நிறைந்த உணவுகள்.
இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid  இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது. நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது.
இதை தவிர்ப்பதற்கு  லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம். அதுமட்டுமின்றி நான் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நான் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு   சிறந்த வழி  நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும்  உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.
பிடித்ததில் அறிந்தது"

------

மேலுள்ள Whatsapp செய்தி ஒரு குழுவில் வந்தது. இதை படித்தஒருவர்  இதிலிருக்கும் சில வார்த்தைகளை வைத்து இணையத்தில் தேடினால் இந்த செய்தியை உண்மையென நம்பும் சாத்தியங்களே அதிகம். அனால் இது மிகப்பெரிய பொய்.

லேட்ரில் (Laetrile) என்பது அமிக்டலின் (amygdalin) என்பதின் செயற்கை வடிவம். அமிக்டலின் என்பது கொட்டைகள், விதைகள், லிமா பீன்ஸ், சோளம் போன்ற தாவரங்களில் காணப்படும் ஒரு இயற்கைப் பொருள். லேட்ரில் என்பது ஒரு வைட்டமின் இல்லை ஆனால் இதைசிலர் வைட்டமின் B17 என்று எதைவைத்து அழைக்கிறார்களென்று தெரியவில்லை.

அமெரிக்காவில், 1970-களில், லேட்ரில் - புற்றுநோயிக்கு எதிரான மருந்தாக பரவலாக நம்பப்பட்டது. ஆனால், லேட்ரில் அல்லது அமிக்டலின் போன்றவைகள் புற்றுநோய் மட்டுமல்ல வேறு எந்த வியாதியையும்  குணப்படுத்தக்கூடிய மருந்தாய் மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டதாய் எந்த ஆதாரமும் இல்லை. இன்றுவரை, மனிதர்களில் லேட்ரிலை வைத்து எந்தவொரு கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ சோதனையும் (controlled clinical trial) வெளியாகவில்லை.

அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனம் (National Cancer Institute, USA), புற்றுநோயாளிகளுக்கு லேட்ரில் சிகிச்சையளித்த மருத்துவர்களின் அறிக்கைகளை ஒரு நிபுணர் குழு வைத்து ஆராய்ந்தது. அதில் 67 நோயாளிகளில் 2 பேர் நல்லமுறையில் தேறிக்கொண்டிருந்ததாகவும், 4 பேருக்கு புற்றுநோய் கட்டிகளின் அளவு குறைந்தனவாகவும் ஊகிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சையின் முடிவில் லேட்ரில்/அமிக்டலின் எடுத்துக்கொண்டர்வர்களுக்கு மேற்கண்ட எந்த ஒரு மேம்பாடும் இருக்கவில்லை. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (U. S. Food and Drug Administration [FDA]) லேட்ரிலை புற்றுநோயக்கோ அல்லது வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கும் இன்றுவரை அனுமதிக்கவில்லை. FDA அமெரிக்காவின் உணவுக் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை மூலம் பொது சுகாதாரத்தை கராறாகப் பாதுகாக்கும் ஒரு பொது நிறுவனம். அமெரிக்காவில் FDA-வின் அனுமதியில்லாமல் எந்தவொரு மருந்தும் சந்தைக்கு வரமுடியாது. இந்தியாவிலும் மற்றநாடுகளிலும் இதுபோன்ற பொது நிறுவனங்கள் இருந்தாலும் அவை FDA-வின் ஒப்புதலை உன்னிப்பாக கவனிக்கின்றன, அங்கீகரிக்கின்றன. இன்றுவரை லேட்ரிலை ஒரு மருந்தாக எந்தவொரு நாடும் ஏற்கவில்லை.

மேலும் hand washing liquid/soap, dish washing liquid/soap போன்றவை பொது சுகாதாரத்திற்கு மிகவும் அவசியமானவை. இவற்றால் புற்றுநோய் உருவாகுமென்று இன்றுவரை யாரும் நிரூபித்ததில்லை.

புற்றுநோயென்பது வைட்டமின் குறைபாடல்ல. கடந்த 5000 வருடங்களாக மனிதனுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும் உயிர்க்கொள்ளி நோயென்பதே உண்மை. மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் நோக்கம் மருந்து விற்பனை மூலம் பெரிய லாபம்பெறுவதே என்றாலும் மருந்துகளை அங்கீகரிக்கும், கட்டுப்படுத்தும் பல்நாட்டு அரசாங்க நிறுவனங்கள் லாப நோக்கமற்றவை. அதனால், பல தரப்பட்ட விலங்குகளில் பலமுறை சோதனை செய்யப்பட்டு FDA  போன்றவொரு அரசாங்க நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் மட்டுமே எந்த நோய்க்கும் தீர்வு. நம்பிக்கைசார்ந்த மருந்துகள் நிச்சயம் உதவாது.

இதுபோன்ற போலி செய்திகள் மருத்துவமட்டுமல்லாது பொதுவாகவே உலகின் மிகப்பெரிய பிரச்னை. அடுத்தமுறை இதுபோன்ற ஒரு தவறான செய்தியை Whatsapp-ல் பகிர்ந்துகொள்வதற்குமுன் அது உண்மையாவென அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்களில் (genuine sites) தெரிந்துகொள்வது நல்லது மேலும் அதை பகிர்ந்துகொள்ளாமலிருப்பது அதைவிட நல்லது.

- Dr. T.K.B. காந்தி, PhD
(தொடரும்)

2 comments: