Sunday, April 24, 2011

பரிணாமம்

உலகெங்கிலுமுள்ள அநேக உயிரியல் ஆராய்ச்சியாளர்களின் கனவு  பரிணாம ஆராய்ச்சியைப் பற்றியதாகத்தான் இருக்கும். ஆனால், அறிவியலில் அதிகம் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட கருத்தும் பரிணாமம் தான். பரிணாமத்தை பற்றிய ஆராய்ச்சியை சார்லஸ் டார்வின் (Charles Darwin; 1809 –1882) ‘On the Origin of Species’ எனும் புத்தகமாக 1859-ல் வெளியிட்டார். பிறகு இந்த புத்தகம் தான் பரிணாமத்தைப் பற்றிய ஆராய்ச்சியின் மூலப்புத்தகமாகியது. டார்வினுக்கு முன் பல ஆய்வாளர்கள் தன் பரிணாமக் கோட்பாடுகளை முன் வைத்தனர்.

குறிப்பாக லமார்க் (Lamarck; 1744 - 1829) என்னும் பிரஞ்சு ஆய்வாளரின் கோட்பாடு (Lamarkism) மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானது (பரிணாமத்தைப் பற்றி பகிரங்கமாக தன் கோட்பாடுகளை முதன் முதலில் வெளியிட்டதும் இவரே). அவர், ”ஒரு உயிரி தன் உறுப்பை (குணம்) தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளக்கூடும் அல்லது புதிய உறுப்பை (குணம்) பெற்றுக்கொள்ளக்கூடும் அல்லது தனக்குத் தேவையில்லாத ஒரு உறுப்பை (குணம்) இழக்கக்கூடும் - இந்த குணங்களை சந்ததிகளுக்கும் கடத்தக்கூடும் (inheritance) என்றும் அறிவித்தார் (inheritance of acquired characteristics as creatures adapted to their environments)”.  

Lamarck in 1821. From © Desmond 1989
உதாரணமாக, ஒட்டகச்சிவிங்கி ஒரு காலத்தில் ஆடு போன்றதொரு விலங்காய் இருந்திருக்கலாம், அது மரங்களின் மேல் நுனியிலுள்ள இலைகளை உண்பதற்காக அதன் கழுத்து நீளமாக வளர்ந்திருக்கூடும் என்பதுதான் அது. அதாவது, ஒட்டகச்சிவிங்கி கழுத்து அதன் விருப்பத்தினால் பல தலைமுறைகளின் பின் நீளமாகியிருக்கலாம்.  ஆனால் இதற்கு fossil தடயங்கள் மற்றும் போதிய ஆதாரங்கள் ஏதுமில்லை. 

மேலும் இவரின் கோட்பாட்டை சரி பார்க்க எலிகளின் வாலை 22 தலைமுறைகள் வெட்டிவிட்டனர், 22 தலைமுறைக்கப்பால் வால் வெட்டிவிடப்பட்ட எலிக்கு பிறந்த எலிக்கும் வாலிருந்தது - லமார்க்கின் கூற்றுப்படி பார்த்தால் பல தலைமுறைக்குப் பின்னால் பிறக்கும் எலிகளுக்கு வாலில்லமல் இருந்திருக்க வேண்டும். மேலும் இவரின் கோட்பாட்டில் பல சிக்கல்கள் இருந்தன. இவரின் கோட்பாடின்படி பார்த்தால் ஒரு பளு தூக்கும் விளையாட்டு வீரரின் பிள்ளைகளுக்கும் தசை வலிமையாய் இருக்கவேண்டும் - ஆனால் அது சாத்தியமில்லை. 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லமார்கிஸம் மிகப் பிரபலமாக இருந்தது, பிறகு டார்வினின் இயற்கைத் தேர்வு கோட்பாடே (Theory of Natural selection) பெரிதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்னும் கருத்து அனைவரும் அறிந்ததே. குரங்கின் ஜீனோம்களில் ஏற்பட்ட தனிச்சை மாற்றங்களின் (mutations) ஒட்டு மொத்த கூட்டு பல தலைமுறைகளை கடந்தபின் குரங்கை மனிதனாக உருமாற வைத்தது. மிக முக்கியமாக இந்நிகழ்வு குரங்கின் விருப்பத்தினால் ஏற்படவில்லை என்பதே உண்மை.
 
- தொடரும்.

No comments:

Post a Comment